வேர் தனது தனது கிளைக்கு எழுதும் கடிதம்
அன்பிற்குறிய ஆஷாவுக்கு,
உன் அப்பாவுக்கு உயிரும்,
உனக்கு உறவுகளும் கொடுத்த உன் பாட்டியின் கடிதம்.
உனக்கு தெரிந்தும், தெரியாமலும் உள்ள சிலவற்றை தெரிவிக்கவே இந்த கடிதம்.
நலம் நலமறிய ஆவல்.
கத்தியும் இரத்தமுமின்றி சிசரியன் அறியா காலத்தில்,
சிசுவாய் நீ பிறவிக்க உன் அன்னைக்கு பேரு காலம் பார்த்தவள் நான்.
உன் அம்மாவின் பேருகாலம் பார்த்தததால், நான் பேரு கால மருத்துவரானேன்...
உனது ஒரு வயதில் உன் கண் அருகில் கட்டி வந்தது,
அப்பொழுது பன்னி வாகை இலையை உப்போடு கலந்து, கைகளில் கசக்கி உன் கட்டியில் கட்டினேன்.
கட்டி காணாமல் போனது.
அன்று நான் தான் உன் கண் மருத்துவர்.
உன் இரண்டாம் வயதினிலே உன் உடல் முழுவதும் தடிப்புகள் ஏற்ப்பட்டது.
உடனே நான் மொசு மொசுக்கை இலையை இடித்து சாரெடுத்து, அதில் வரட்டி எறிந்த சாம்பலை நீர் இட்டு பிசைந்து,
உன் தேகமெல்லாம் தேய்த்து விட்டேன்.
ஒரே நாளில் தழும்பு தடம் இன்றி மறைந்தது.
அன்று நான் உன் தோல் மறுத்துவர்.
பிறகு உன் ஐந்தாம் வயதில் உன் பல் இடையில் பூச்சி வந்து அவதியுற்றாய்.
உடனே வெட்டருவாவை நெருப்பில் சுட்டு, அதை அரையளவு தண்ணீர் உள்ள சட்டியில் பக்கவாட்டாய் படுக்க வைத்து,
அந்த அருவாளில் கண்டங்கத்திரி விதையை தூவினேன், அதில் வந்த புகையை உன் வாயால் சுவாசிக்க செய்து பல் பூச்சியை கொன்றேன்.
தண்ணீரில் சிதறி கிடந்த கண்டங்கத்தரி விதைகளை, பூச்சி என கூறி உள்னை நம்ப செய்தேன்.
அன்று நான் தான் உன் பல் மந்ததுவர்.
உனக்கு ஏழு வயதிருக்கும், கண்டிப்பாக இது உன் நினைவில் இருக்கும் என நினைக்கிறேன்.
உன் காதில் சீழ் வடிந்தது, நீ காது வலியால் துடித்தாய்.
நானோ பெரிய மிளகாய் வத்தலை நடுவில் உடைத்து, காம்பு உள்ள பகுதியை மட்டும் எடுத்து.
அதில் இருந்த விதையை நீக்கி அந்த கூட்டில் கத்தாளை செடியின் சாரும் நல்லெண்னயும் விட்டு, மெழுகுவத்தியில் சுட்டு, பின் இளம் சூட்டில் உன் காதில் விட்டேன்.
காணாமல் போனது வலியும் உன் காதில் வடிந்த சீழும்.
அன்று நான் தானே உன் காது மருத்துவர்.
மொத்தத்தில் நான் தான் உன்மையான குடும்ப மருத்துவர்.
அன்று குழந்தையாய் இருந்த நீ, ஒர் குழந்தைக்கு தாயாய் ஆகி இன்று வந்துள்ளாய், மிக்க மகிழ்ச்சி.
உன் குழந்தையை பார்க்க எனக்கு ஆசை, நீ ஏனோ காட்டவில்லை.
சரி இன்று நீயும் உன் அம்மாவும் ஏதோ காதுக்குள் கிசுகிசுத்து பேசினீர்கள்,
நீ உன் அம்மாவை பார்த்து "பாட்டியிடம் குழந்தையை கொடுத்து விடாதே ஏதாவது இன்பெக்சன் ஆகிவிடும்".என்றாய்.
எனக்கு ஆங்கிலம் தெரியாது.
ஆமாம் இன்பெக்சன்ன என்னம்மா?
நன்றி
இப்படிக்கு.
உன் நலம் விரும்பும் பாட்டி அம்புஜம்.
எழுதியவர்.
R.V. நல்ல பெருமாள் BCom BL.
வழக்கறிஞர்.
விருதுநகர்.
Comments
Post a Comment